தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

தமிழா!தமிழா!ஒன்றுபடு தாயகவிடுதலையை வென்றுவிடு

Friday 26 March 2010

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்ப முயன்ற 23 ஈழத்தமிழர்கள் கைது


தமிழ்நாடு, கன்னியாகுமாரி மாவட்டத்தில் இருந்து அனுமதியில்லாமல் படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற 23 ஈழத்தமிழ் இளைஞர்களை தமிழகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு அகதி முகாம்களில் வசித்து வந்த 23 தமிழ் இளைஞர்கள் இலங்கையில் போர் முடிந்துவிட்டதால் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

முறைப்படி அரசிடம் அனுமதி வாங்கி நாடு திரும்புவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் மறைமுகமாக ஒரு முகவரின் உதவியுடன் இலங்கை திரும்ப முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி நேற்று முன்தினம் நாகர்கோவிலை அடுத்துள்ள‌ தூத்தூர் மண்டபம் என்ற இடத்திலிருந்து ஒரு படகில் இலங்கைக்கு புறப்பட்டுள்ளனர்.

ஆனால் வழியிலேயே படகின் இயந்திரம் பழுதாகிவிட்டதால் உடன் இருந்த முகவர்கள் கரைக்குச் சென்று ஆட்களை அழைத்து வருவதாகச் சொல்லி சிறிய படகொன்றில் கரைக்குச் சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் சென்று ஒரு நாளாகியும் திரும்பி வராததால் மறுநாள் கடலில் அந்தப் பக்கமாக வந்த சகாயதாஸ் என்பவரிடம் உதவி கேட்டு அவர் மூலமாக அகதிகள் 23 பேரும் கரைக்கு திரும்பியுள்ளனர்.

அங்கே அவர்களிடம் விசாரித்தபோதுதான் அவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களில் வசித்த இலங்கை தமிழ் அகதிகள் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சகாயதாஸ் அருகில் உள்ள பொலிஸ்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, பொலிஸார் விரைந்து வந்து 23 தமிழ் அகதிகளையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.