தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

தமிழா!தமிழா!ஒன்றுபடு தாயகவிடுதலையை வென்றுவிடு

Monday 29 March 2010

வன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணியில் தமிழ்ப் பெண்கள்

தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணிகளில் அப்பாவித் தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் ஈடுபடுத்தியுள்ளது. அவர்களுக்கு உதவியாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈழத்தில் போர் முடிவுக்கு வந்ந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். போர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கி விட்ட நிலையில் இன்னும் இந்தப் பணிகளை முடிக்கவில்லை.

Sunday 28 March 2010

பொதுமக்கள் கைவிட்டு வந்த வாகன பட்டியல்!


முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்கள் கைவிட்டுவந்த வாகனங்கள், பற்றிய விபரங்களடங்கிய பட்டியல் வவுனியா மாவட்ட செயலகம், மற்றும் வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.தமது வாகனங்கள், உடைமைகள் குறித்து உரிமை கோருபவர்கள். தகுந்த ஆதாரங்களுடனும், ஆவணங்களுடனும் வருமாறு வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


நேற்று மேலும் 500 மோட்டார்சைக்கிள்கள் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டன.இதுவரை சுமார் 6000க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் குவிக்கப்பட்டுள்ளன.இவற்றுக்கென 16 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

Saturday 27 March 2010

முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிககை ஆரம்பம்


வற்றாப்பளையில் மீள் குடியேற்றம் பூர்த்தி
முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். மோதல்களின் போது முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.

வற்றாப்பளைக் கிராமம் முழுவதும் வெற்றிகரமாக மீள் குடியேற்றம் செய்யப் பட்டிருக்கும் நிலையில் துணுக்காய், மாந்தை கிழக்கில் 90 சதவீதமான மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அர சாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த 23 ஆயிரம் பேர் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மீள அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் 25 வது பட்டமளிப்பு விழா


யாழ் பல்கலைக்கழகத்தின் 25 வது பட்டமளிப்பு விழா கைலாசபதி கலையரங்கில் இன்று முதல் மூன்று நாட்களுக்குக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இப்பட்டமளிப்பு விழாவில் 2005,2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்த 3 ஆயிரத்து 972 பேர் பட்டம் பெறவுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ம.சிவசூரியா தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பில் ஒவ்வொரு நாளும் 15 அமர்வுகள் நடைபெறும். இப் பட்டமளிப்பு விழாவில் கலாநிதி, முதுகலைமாணி, இளமாணி, பட்டப்பின் டிப்ளோமா ஆகிய பட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

சுமார் ஐந்து வருட கால இடைவெளியின் பின் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி சிறைச்சாலை 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளது


கிளிநொச்சி சிறைச்சாலை 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ள நீதி மற்றும் நீதிமறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறைச்சாலை கட்டிடம் விடுதலைப்புலிகளின் முகாமாக இயங்கிவந்தது. சேதமடைந்த நிலையில் காணப்படும் கிளிநொச்சி சிறைச்சாலை கட்டிடத்தை சீரமைத்த பின்னர் அடுத்த சில மாதங்களில் அது திறக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தை இயங்க வைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சிறைச்சாலையை ஏற்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைத்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர்கள் தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளர்.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ரெஜி என்ற கனகலிங்கம் பிரேமராஜியை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையினர் பிடிவிறாந்து? திவயின கூறுகிறது


விடுதலைப்புலிகளின் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் இலங்கை பொறுப்பாளராக பணியாற்றிய ரெஜி என்ற கனகலிங்கம் பிரேமராஜி என்பவரை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையினர் சர்வதேச ரீதியிலான பிடிவிராந்தை பிறப்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான இறுதிக்கட்ட மோதல்கள் நடைபெற்ற போது ரெஜி வன்னியில் இருந்து லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். எனினும் இவரை பிரித்தானிய அரசாங்கம் கைதுசெய்து இலங்கைக்கு அனுப்பவில்லை.

தமிழர் புனர்வாழ்வு கழகம் கொழும்பில் இயங்கிய போது, ரெஜி வர்த்தகர்கள் பலரிடம் பெருமளவில் நிதியை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு நிதி வழங்கிய வர்த்தகர்களின் பட்டியல் ஒன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து படையினரால் மீட்கப்பட்டதாகவும் திவயின தெரிவித்துள்ளது.

Friday 26 March 2010

மட்டகளப்பு வவுணதீவு பகுதியில் ஆகாரம் நஞ்சுத் தன்மையால் 112 மாணவர்கள் வைத்தியசாலையில்


மட்டகளப்பு வவுணத்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இருட்டுச்சேலை மடு வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 112 மாணவர்கள் அருந்திய ஆகாரத்தில் நஞ்சுத்தன்மை கலக்கப்பட்டதால் அவசர வைத்திய சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்தப்பட்டனர். இருட்டுச்சேலை மடு விஷ்னு வித்தியாலயத்தை சேர்ந்த இம் மாணவர்கள் பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவினை அருந்திய பின்னர் வயிற்றிழைவு மற்றும் வாந்தி எடுத்து நோய்க்கு உட்பட்ட பின்னர் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக இவ் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 06 வயதிற்கும் 12 வயதிற்கும் உட்பட்டவர்கள் எனவும் தற்போதைய நிலையில் ஆபத்தான நிலையில் இருந்து அவசர சிகிச்சை நிலைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.மேலும் இச் சம்பவம் தொடர்பில் மட்டகளப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.