தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணிகளில் அப்பாவித் தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் ஈடுபடுத்தியுள்ளது. அவர்களுக்கு உதவியாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈழத்தில் போர் முடிவுக்கு வந்ந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். போர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கி விட்ட நிலையில் இன்னும் இந்தப் பணிகளை முடிக்கவில்லை.
இதைக் காரணம் காட்டியே அங்கிருந்து இடம் பெயர்ந்து வந்த அப்பாவித் தமிழர்களை இன்னும் மீள் குடியேற்றம் செய்யாமல் இலங்கை அரசு இழுத்தடித்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அப்பாவித் தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரிகளும் உதவியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இலங்கையின் வட பகுதியில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்தப்பணி அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சசிகாந்த் பித்ரே தலைமையில் பெண்கள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
ஆனால் இது மிகவும் அபாயகரமானது. இதுபோன்ற ஆபத்தான பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவது கிடையாது. கண்ணிவெடி பகுதிகளில் அவர்கள் நடமாடுவது ஆபத்தானது என்று நோர்வேயின் மக்கள் உதவிக்குழு கவலை தெரிவித்துள்ளது.